Friday, February 29, 2008

கலையும் இரவுகள்

நீண்டு வளர்ந்த பனைக்கூடல்கள்

நிலவை மறைத்திருந்தது

இருந்தும்

ஊடறுத்து விழும் பொன்னொளி

மணலில் வெண்மையாக

தவள்ந்தது



மெதுவாக வீசிய காற்றில்

காய்ந்த ஓலைகள்

லேசாக சலசலத்தது

காகங்கள் விழித்துக்கொள்ள

என்னும் கொஞ்ச நேரம் இருக்கின்றது



பின்னிரவின் நிசப்தம்

முனிகள் நடமாடும் நேரம் என்று

முன்பு சொல்லக்கேட்டதுண்டு

இருந்தும்

அந்தப் பயம்

செத்துப்போய்

நீண்ட நாள் ஆகிவிட்டது



நிலவுக்கு எதிர்ப்புறம்

சாய்ந்திருந்த அவளில்

நிலவொளி விழவில்லை



வெறுமை மிஞசிய வாழ்வில்

கருவாட்டின் கண்கள் போல்

விழிகள் காய்ந்திருந்தன



இந்த பனைக்கூடலுக்குள்

சிங்கள சிப்பாய்களின்

துப்பாக்கிச் சன்னங்கள்

சொந்தங்களை

சல்லடைபோட்டு

தொலைந்து விட்டது

இருந்தும்

சன்னம் பாய்ந்த பனைகள் சில

சாய்ந்து கொள்ள

நிமிர்ந்து நிற்கின்றது



எறிகணைகளை தாங்கி

முறிந்த பனைகளில்

பச்சைக்கிளிகள்

சத்தம் போடாமல்

குந்தியிருக்கின்றது



தூரத்தே சப்பாத்துகள்

கீழே விழுந்த ஓலைகளை

நெருக்கும்

சத்தங்கள் கேட்டது



மெல்ல எழுந்து வீட்டுக்குள் போனாள்

ஏணைக்குள் பிள்ளை

வெறும் சூப்பிப்போத்தலை

உவிந்தபடி

தூங்கி கொண்டிருந்தது

அவள் வாழ்க்கையின் சூனியத்தை

மழலையின் மெல்லிய மூச்சொலி

கலைத்துக்கொண்டிருந்தது…

No comments:

எம்பெருமான்

உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...