Friday, February 29, 2008

வெயில் நினைவுகள்

பிஞ்சு நாற்றுகள் வளரந்து
கன்னியாகி விட்டது
களைகளும் கன்னியில் ஆசைப்பட்டு
வளரத் தொடங்கி விட்டது

அகண்ட வயற்பரப்பில்
நீண்ட வரிசையில்
நாரிகள் வானம் பாரத்து
கண்கள் பயிரைப்பாரத்து
கைகள் களைகளை மேயும்

வெயில் ஏற ஏற
காலடி தண்ணியும் சுடும்
நாரியில் படும் வெயில்
உப்பை காச்சி வெளியேற்றும்

முகிலுக்குள் சூரியன் மறைய
தென்றல் சற்று தேகத்தை உலர்த்தும்
வேர்வை காய்ந்து
வெள்ளை உப்பு
வரிக்கோலம் போட்டிருக்கும்

ஆடைமறைக்காத நாரியில்
தொப்பழங்கள்
களைகளைப்போல்
முளைக்கும்

உடைந்த கொப்பழங்களில்
உப்பு வேர்வை நுழைய
எரிவெடுக்கும்

நாரி உழையும்
களைளை பிடி கட்டி
வரப்பில் எறியும் சாட்டில்
சற்று நிமிரும் போதும்
கண்காணி கத்துவான்

நாரையும் கொக்கும்
போட்ட எச்சங்கள்
வெள்ளையாய் காலடியில்
மிதிபடும்

பத்துமணிக்கும் நாலு மணிக்கும்
தேத்தண்ணி
சரையில் சுற்றிய
சக்கரையை கடித்து
தேத்தண்ணி குடிக்க
தேக நடுக்கம் குறையும்
அந்த பத்து நிமிட பொழுது
பள்ளியறையை விட சுகம்

மாலை வரும் போது
மனதும் மகிழும்
ஒய்வென்ற ஒன்று தரும் சுகம்
அடித்து படுக்க போட்ட
அசதியான நித்திரை

இடையில் கணவன்
இடைஞ்சல்கள் செய்தது
விடிய சில வேளை
நினைவில் வராமல் போகலாம்

வேதனைகளை சுமந்து
அடுத்தநாள் விடியும்
வயற்காடு நோக்கி
வாழ்க்கை விரட்டும்
வானத்தைப்பார்து
பெரு மூச்சு ஒன்று விட்டபடி
மனதை முந்தி
கால்கள் நடக்கும

சில சமயம்
வலியிலும் வேதனையிலும்
வெளிவரும் கண்ணீரை
துடைக்க தேவையில்லை
காலடித்தண்ணீருடன்
கலந்துவிடும்
நிமிர்ந்து ஏன்அழப்போகின்றோம்
அழுவது தெரிவதற்கு?

தெரிந்தென்ன இந்த
நீதி கெட்ட உலகத்தில்

தண்ணீரோடு கலந்த கண்ணீரை
பயிரின் வேர்கள் உறிஞ்சும்
நாளை பொன் குவியல்களால்
நெற்கள் குவியும்
சோறாக பொங்கி சரியும்
அவைகளில்
அவள் முகம் தெரியும்
காட்சிகளும் சாட்சிகளும் இன்றி
கண்ணீர் சிரிக்கும்


-சின்னா

No comments:

எம்பெருமான்

உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...