Friday, February 29, 2008

கடவுள்







உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பே ஆலையம்
வள்ளல் பிரானுக்கு
வாய் கோபுர வாசல்
தெள்ள தெளிந்தார்க்கு
சீவன் சிவலிங்கம்

திருமூலர் சொன்னது

உயிர் தான் கடவுள்
இந்த ஜீவன்களுக்குள்ளும்
கடவுள் இன்னும் இறக்கவில்லை

கடவுள் இங்கே
இதை விடுத்து
எங்கே தேடுகின்றாய் மானுடனே?

கண்ணுக்கு முன்னால்
கடவுள்
காணிக்கையை அவரிடம்
நேரடியாய் கொடுத்துவிடு


ஆலயங்கள் இடிகின்றது
சீவன் சாகிறது
கடவுளிடம் இருந்து
விலகாதே மானுடனே

கருங்கல்லை கடவுள் என்று
வைக்கலில் ஊறிய பசும்பாலை
கல்லின் மேல் உற்றி
கருணையற்றவன் ஆகாதே
உயிருள்ள கடவுளின்
வாய்கள் வறண்டு கிடக்கின்றது.

மலைபோல் தேங்காய்களை
சபரிமலையில்
விரையமாக்கதே
கடவுளிடம் நேரடியாய் கொடுத்துவிடு

பட்டுப்பூச்சிகளை கொன்று
பட்டு நெய்து
பட்டாபிசேகம் என்னும்
பாபத்தை செய்யாதே
அந்த பணத்தை
பசியோடு இருக்கும் கடவுளுக்கு
பாசமாய் கொடுத்து விடு
நேசமாய் கடவுளுடன்
கூடியிரு

உனக்குள் இருக்கும்
உயிர்தான் கடவுள் என்று
உணர்ந்து விடு
கடவுள்களுடன்
கைகோர்த்துவிடு

கடவுள் என்று சொன்னார்
கடந்து உன்னுள் சென்றுவிடு.


-சின்னா

மழை நினைவுகள்

விண்மீன்கள் கண்ணுக்கு தெரியாத
காரிருள்
மின்சாரமில்லாததெருக்களில்
ஈசல்கள் ஊர்வலம்

முகத்திலடிக்கும் வண்டுகள்
கண்ணுக்கள் சென்றுவிட்டால்
கண்ணீருடன் வெளிவரும்
கசக்கி விட்டால்
மிச்சமும் சூனியம்

மல்லுக்கட்டும்
மாரித்தவளைகளின்
சத்தம் ஒரு சங்கீதம்

வெட்டும் மின்னல்
விடலைப்பயிர்களை
புகைப்படம் எடுக்கும்

தூறல்கள் சாரல்கள்
எங்கும் நனையும் உடம்பில்
தலைமட்டும்
உரப்பையின் முக்கோணத்துள்
தப்பிவிடும்

மக்காட்டில்லாத சைக்கிள்
சேறை வாரி
முதுகிலடிக்கும்
தூறல்கள் கழுவி விடும்

பற்கள் குளிரில் கிடுகிடுக்கும்
கண்ணாடிப்பையில்
சுத்தி வைத்த வீடி
சொர்கத்தை நினைவு படுத்தும்

நெருப்பு பெட்டியை
கமக்கட்டுள் வைத்து
சூடேற்றி பற்றவைத்து
சடுதியில் ஒரு சாதனை

வீட்டின் மூலையில்
புகையும் நெருப்புச்சட்டியில்
குளிர்ந்த கைகளை
சூடேற்றுவது சுகம்

கிடுகு கசிந்து
ஒழுகும் இடத்திலெல்லாம்
கிண்ணம்

கிண்ணத்தில் விழும்
ஒழுக் கின் ஓசையின்
இதமான தாலாட்டில்
அணில்கோடன் சாக்குள்
ஆசுவாசமாக காலை விட்டு
சற்று நேரத்தில் குறட்டை விட்டு
நிம்மதியான நித்திரை

கருக்கலில் எழும்பி
மீண்டும் நடையை கட்ட
விரட்டும் வெயில்
வேர்வை தெறிக்க
இரவின் குளிர்
வேண்டும் எனும்
மீண்டும் மனம்
-சின்னா

வெயில் நினைவுகள்

பிஞ்சு நாற்றுகள் வளரந்து
கன்னியாகி விட்டது
களைகளும் கன்னியில் ஆசைப்பட்டு
வளரத் தொடங்கி விட்டது

அகண்ட வயற்பரப்பில்
நீண்ட வரிசையில்
நாரிகள் வானம் பாரத்து
கண்கள் பயிரைப்பாரத்து
கைகள் களைகளை மேயும்

வெயில் ஏற ஏற
காலடி தண்ணியும் சுடும்
நாரியில் படும் வெயில்
உப்பை காச்சி வெளியேற்றும்

முகிலுக்குள் சூரியன் மறைய
தென்றல் சற்று தேகத்தை உலர்த்தும்
வேர்வை காய்ந்து
வெள்ளை உப்பு
வரிக்கோலம் போட்டிருக்கும்

ஆடைமறைக்காத நாரியில்
தொப்பழங்கள்
களைகளைப்போல்
முளைக்கும்

உடைந்த கொப்பழங்களில்
உப்பு வேர்வை நுழைய
எரிவெடுக்கும்

நாரி உழையும்
களைளை பிடி கட்டி
வரப்பில் எறியும் சாட்டில்
சற்று நிமிரும் போதும்
கண்காணி கத்துவான்

நாரையும் கொக்கும்
போட்ட எச்சங்கள்
வெள்ளையாய் காலடியில்
மிதிபடும்

பத்துமணிக்கும் நாலு மணிக்கும்
தேத்தண்ணி
சரையில் சுற்றிய
சக்கரையை கடித்து
தேத்தண்ணி குடிக்க
தேக நடுக்கம் குறையும்
அந்த பத்து நிமிட பொழுது
பள்ளியறையை விட சுகம்

மாலை வரும் போது
மனதும் மகிழும்
ஒய்வென்ற ஒன்று தரும் சுகம்
அடித்து படுக்க போட்ட
அசதியான நித்திரை

இடையில் கணவன்
இடைஞ்சல்கள் செய்தது
விடிய சில வேளை
நினைவில் வராமல் போகலாம்

வேதனைகளை சுமந்து
அடுத்தநாள் விடியும்
வயற்காடு நோக்கி
வாழ்க்கை விரட்டும்
வானத்தைப்பார்து
பெரு மூச்சு ஒன்று விட்டபடி
மனதை முந்தி
கால்கள் நடக்கும

சில சமயம்
வலியிலும் வேதனையிலும்
வெளிவரும் கண்ணீரை
துடைக்க தேவையில்லை
காலடித்தண்ணீருடன்
கலந்துவிடும்
நிமிர்ந்து ஏன்அழப்போகின்றோம்
அழுவது தெரிவதற்கு?

தெரிந்தென்ன இந்த
நீதி கெட்ட உலகத்தில்

தண்ணீரோடு கலந்த கண்ணீரை
பயிரின் வேர்கள் உறிஞ்சும்
நாளை பொன் குவியல்களால்
நெற்கள் குவியும்
சோறாக பொங்கி சரியும்
அவைகளில்
அவள் முகம் தெரியும்
காட்சிகளும் சாட்சிகளும் இன்றி
கண்ணீர் சிரிக்கும்


-சின்னா

கலையும் இரவுகள்

நீண்டு வளர்ந்த பனைக்கூடல்கள்

நிலவை மறைத்திருந்தது

இருந்தும்

ஊடறுத்து விழும் பொன்னொளி

மணலில் வெண்மையாக

தவள்ந்தது



மெதுவாக வீசிய காற்றில்

காய்ந்த ஓலைகள்

லேசாக சலசலத்தது

காகங்கள் விழித்துக்கொள்ள

என்னும் கொஞ்ச நேரம் இருக்கின்றது



பின்னிரவின் நிசப்தம்

முனிகள் நடமாடும் நேரம் என்று

முன்பு சொல்லக்கேட்டதுண்டு

இருந்தும்

அந்தப் பயம்

செத்துப்போய்

நீண்ட நாள் ஆகிவிட்டது



நிலவுக்கு எதிர்ப்புறம்

சாய்ந்திருந்த அவளில்

நிலவொளி விழவில்லை



வெறுமை மிஞசிய வாழ்வில்

கருவாட்டின் கண்கள் போல்

விழிகள் காய்ந்திருந்தன



இந்த பனைக்கூடலுக்குள்

சிங்கள சிப்பாய்களின்

துப்பாக்கிச் சன்னங்கள்

சொந்தங்களை

சல்லடைபோட்டு

தொலைந்து விட்டது

இருந்தும்

சன்னம் பாய்ந்த பனைகள் சில

சாய்ந்து கொள்ள

நிமிர்ந்து நிற்கின்றது



எறிகணைகளை தாங்கி

முறிந்த பனைகளில்

பச்சைக்கிளிகள்

சத்தம் போடாமல்

குந்தியிருக்கின்றது



தூரத்தே சப்பாத்துகள்

கீழே விழுந்த ஓலைகளை

நெருக்கும்

சத்தங்கள் கேட்டது



மெல்ல எழுந்து வீட்டுக்குள் போனாள்

ஏணைக்குள் பிள்ளை

வெறும் சூப்பிப்போத்தலை

உவிந்தபடி

தூங்கி கொண்டிருந்தது

அவள் வாழ்க்கையின் சூனியத்தை

மழலையின் மெல்லிய மூச்சொலி

கலைத்துக்கொண்டிருந்தது…

எம்பெருமான்

உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...